பாலி:
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்தோனேசியாவின் பாலித் தீவில் மின்தூக்கியின் கம்பிவடம் அறுந்து விழுந்ததில், ஐவர் உயிரிழந்தனர்.
பாலியின் உபுத் வட்டாரத்தில் உள்ள அயுத்தேரா எனும் உல்லாச விடுதியில் திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
மாண்ட ஐவரும் அந்த உல்லாச விடுதியின் பணியாளர்கள் எனவும், அவர்களில் இருவர் ஆண்கள், மூவர் பெண்கள் எனவும், அவர்கள் 19 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
வெளிப்புறத்தில் இருந்த அந்த மின்தூக்கி 60 டிகிரி சாய்நிலையில் செயல்பட்டு வந்தது.
கண்ணாடியால் மூடப்பட்ட அம்மின்தூக்கியை இணைத்திருந்த எஃகுவடம் அறுந்துபோக, மின்தூக்கி 100 அடி பள்ளத்தில் விழுந்ததாக ‘ஜகார்த்தா போஸ்ட்’ செய்தி குறிப்பிட்டது.
நிகழ்விடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் மூவரும் மாண்டதாக அறியமுடிகிறது.