கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) சிங்கப்பூர் செல்கிறார்.
இப்பயணத்தின்போது பிரதமரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரதமருடன் செல்கிறார் என்றும், பிரதமர் தம்பதியினரை சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியார் ஹோ சிங்கும் வரவேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
மலேசியாவின் நிதி அமைச்சருமான அன்வார் ‘மில்கன் கழக ஆசிய மாநாடு 2023’இல் பேசுவார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியது.
மேலும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், அமெரிக்க நிதி அமைச்சர் ஜீனா ராய்மோண்டோ உள்ளிட்டோரும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.





















