அலோர் ஸ்டார்:
நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து,பாலிங்கின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்களது வீடுகள் மூழ்கியதால், அங்குள்ள 33 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 102 பேர் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தனர்.
அங்கு இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டதாகவும் அதாவது மஸ்ஜிட் இஸ்லாஹியா தாவார் மற்றும் மஸ்ஜிட் பிஞ்சுல் லுவாரில் இயங்குவதாக கெடா சிவில் பாதுகாப்புப் படையின் (APM) பேரிடர் மேலாண்மை செயலகத்தின் தலைவர், மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.
மேலும் வியாழன் அன்று பிற்பகலில் பெய்த கனமழையால் கெடில் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் கம்போங் பா டாங் எம்பாங் மற்றும் கம்போங் இபோய் ஆகிய பகுதிகள் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இரவு 8 மணியளவில் கம்போங் கோலா பெகாங்கில் பதிவான நதியின் நீர்மட்டம் அபாய அளவை 36.19 மீட்டரைத் தாண்டியுள்ளது என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
“பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் வெள்ள நிலைமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.