கோலாலம்பூர்:
சந்தையில் வெள்ளை அரிசி விநியோகம் போதுமான அளவில் இருக்கிறது. அச்சம் கொள்ள வேண்டாம் என்று பெர்னாஸ் எனப்படும் பாடி பெராஸ் நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் பொதுமக்களுக்கு நேற்று உறுதி அளித்தது.
2023 ஜனவரியில் இருந்து ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் வெள்ளை அரிசி விநியோகம் 38 விழுக்காடு உயர்வைக் கண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த அதிகரிப்பு இருக்கிறது என்று நேற்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் பெர்னாஸ் விளக்கமளித்தது.
கடந்த 8 மாதங்களில் 630,000 மெட்ரிக் டன் அரிசியை பெர்னாஸ் விநியோகம் செய்திருக்கிறது. அதே சமயம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகமும் முறையாக நிர்வகிக்கப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் சந்தையில் வெள்ளை அரிசியின் விநியோகம் போதுமான அளவில் இருக்கிறது. தன்னுடைய கையிருப்பில் அரசாங்கம் கைவைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று பெர்னாஸ் கூறியது.
உள்நாட்டு வெள்ளை அரிசி, இறக்குமதி வெள்ளை அரிசி ஆகியவற்றுக்கு இடையிலான மாறுபட்ட விலைகள் காரணமாகவே உள்நாட்டு வெள்ளை அரிசிக்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதையும் அது சுட்டிக்காட்டியது.
உணவக உரிமையாளர்கள், குத்தகை விநியோகஸ்தர்கள், பயனீட்டாளர்கள் ஆகியோர் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியைக் காட்டிலும் உள்நாட்டு வெள்ளை அரிசிக்குத் திரும்பி இருப்பதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று பெர்னாஸ் தெரிவித்தது.

























