கோலாலம்பூர் :
ஜாலான் தாண்டாங் வழியாகச் செல்லும் Rapid KL பேருந்து இன்று காலை திடீரென தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த எட்டு பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர்.
எனினும், பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியத்தைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
காலை 11.17 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், ஜாலான் பென்சாலா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, துணை இயக்குனரான அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
இந்த விபத்தில் Rapid KL பேருந்து 90 விழுக்காடு எரிந்து நாசமானது. மேலும் சம்பவத்தின்போது எட்டு பயணிகள் இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.