ஜோகூர் பாரு:
கோலாலம்பூரில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையத்திற்குப் பிறகு, இன்று ஜோகூரில் நாட்டின் இரண்டாவது டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
“டெஸ்லாவின் கூற்றுப்படி, தலைநகருக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் டெஸ்லா பயனர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பதன் அடிப்படையில், ஜோகூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜோகூர் முதலீடு, வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரக் குழுத் தலைவர் லீ டிங் ஹான் கூறினார்.
மின்சார வாகன (EV) நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஜோகூர் மாநிலத்தில் கூடுதல் வாகன மின்னேற்றல் நிலையங்களை அமைக்க ஜோகூர் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இது பசுமைத் தொழில்நுட்ப மேம்பாட்டை உள்ளடக்கிய மாநில அரசின் Maju Johor 2030 நிகழ்ச்சி நிரலுக்கு இணங்குவதாக, இன்று வியாழன் (அக்.5) இஸ்கண்டார் புத்திரியில் உள்ள சன்வே பிக் பாக்ஸில் ஜோகூரின் முதல் டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையத்தை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் கூறினார்.
மேலும் “இதுபோன்ற வசதிகள் சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்கு அதிக கார் உரிமையாளர்களை ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று லீ கூறினார்.
இந்த வெளியீட்டை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தலைமையேற்றி நடத்தினார்என்பது குறிப்பிடத்தக்கது.