ஜோகூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டதற்காக இரண்டு கப்பல்கள் தடுத்து வைப்பு

கோத்தா திங்கி:

ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டதற்காக இரண்டு போக்குவரத்துக் கப்பல்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA ) தடுத்து வைத்துள்ளது.

MMEA தஞ்சோங் செடிலி கடல்சார் மண்டலத்தின் பதில் இயக்குனர் கடல்சார் கொமாண்டர் முகமட் நஜிப் சாம் கூறுகையில், நேற்று வியாழன் (அக். 19) மதியம் 1 மணியளவில் முதல் கப்பல் தஞ்சோங் சியாங்கிற்கு தென்கிழக்கே 25.2 கடல் மைல் (46.67 கிமீ) தொலைவில் தடுத்து வைக்கப்பட்டது.

மற்றையது பிற்பகல் 2.45 மணியளவில் தஞ்சோங் பாலாவ்வுக்கு தென்கிழக்கே 22.8 கடல் மைல் (42.22 கிமீ) தொலைவில் நிறுத்தப்பட்டது என்றார்.

“மொன்ரோவியாவில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு கப்பல்களின் கேப்டன்கள் மலேசியக் கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (அக். 20) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் 1952 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் கட்டளைச் சட்டத்தின் 491பி (1) (எல்) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

இந்த மாதம் இதுவரை ஜோகூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டதற்காக 6 கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 71 கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முகமட் நஜிப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here