ஷா ஆலம்:
நாட்டின் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று MCA வலியுறுத்தியுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தக்கூடிய இரண்டாவது நிதியமைச்சரை அன்வார் நியமிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் அன்வார் தேசிய விஷயங்களில் முழு கவனம் செலுத்த முடியும் என்று, MCA கட்சியின் மத்திய தகவல் தலைவர் மைக் சோங் இயூ சுவான் கூறினார்.
“இந்தப் பதவிக்கான புதிய நியமனம் நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார் அவர்.
“இவ்வாறு செய்தால் பிரதமரால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு மிகவும் நுணுக்கமாகவும் விரிவான முறையிலும் பதிலளிக்க முடியும், மேலும் இது அரசாங்க கொள்கைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் ” என்று அவர் நேற்று தனது பேஸ்புக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சமீபத்தில் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட சோங், பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி மற்றும் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு அன்வாருக்கு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























