60 ஆண்டுக்கு பின் மீண்டும் “போர்..” இப்படியொரு நிலைமை ஏற்படும்னு யாரும் நினைக்கல

சியோல்: கொரோனாவுக்கு பிறகு தென்கொரியா இப்போது மிக முக்கிய பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. இது தென் கொரியாவை முடக்கிப் போடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு தென்கொரியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி தான். இதன் அண்டை நாடான வடகொரியா சர்வாதிகாரத்தின் பிடியில், சிக்கித் தவிக்கும் நிலையில், தென் கொரியா டெக்னாலஜியில் வேற லெவலில் இருக்கிறது.

பல நவீனத் தொழில்நுட்பங்கள் தென் கொரியாவை ஆக்கிரமித்து வருகிறது. இப்படி நவீனத்தை நோக்கி முன்னேறி வரும் தென்கொரியா இப்போது வினோதமான மற்றும் சிக்கலான பிரச்சினையைச் சந்தித்து வருகிறது.

தென் கொரியா: கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளிலும் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின்னர் பல உலக நாடுகளில் சுற்றுலா அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவில் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் மறுபுறம் தென்கொரியா மற்றொரு சிக்கலையும் எதிர்கொண்டுள்ளது.

அதாவது தென் கொரியாவில் பல இடங்களில் இப்போது மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளைத் தவிர்க்க உள்ளூர்வாசிகள் பொது போக்குவரத்து மற்றும் சினிமாக்களைத் தவிர்க்குமாறு தென்கொரிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளில் மூட்டைப்பூச்சி பிரச்சினை அதிகமாக இருக்கும் நிலையில், அங்கிருந்து வரும் பணிகள் தங்கள் உடைமைகள் கிருமி நீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூட்டைப்பூச்சி பிரச்சினை: வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மூட்டைப் பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாடு திரும்பியதும் தங்கள் அனைத்து பயண உபகரணங்களை முழுமையாகக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்று தென்கொரியா நோய் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு இடத்தில் இருக்கும் மூட்டை பூச்சி மற்ற இடங்களிலும் பரவாமல் இருக்கவே தென்கொரிய அரசு இப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதற்காக நான்கு வாரங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தென்கொரிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மூட்டைப்பூச்சி அதிகமாக இருக்கும் பாத் ரூம்கள், ஹோட்டல்கள், குழந்தை பராமரிப்பு மையங்களில் ஆய்வு நடத்தி, அங்கே பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பூச்சிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் உடனடியாக கிருமி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்தவே முடியல: கடந்த நவ. 7ஆம் தேதி வரை தென் கொரியாவில் 30 இடங்களில் மூட்டைப்பூச்சி பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. தென் கொரியாவில் 1960களில் இந்த மூட்டைப்பூச்சி பிரச்சினை கட்டுப்படுத்தவே முடியாத பிரச்சினையாக இருந்தது. பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே மூட்டைப்பூச்சி பிரச்சினை சரி செய்யப்பட்டது. இப்போது சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூட்டைப்பூச்சி பிரச்சினை தலைவிரித்து ஆட தொடங்கியுள்ளது.

அலட்சியம் வேண்டாம்: இப்போது 30 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே அதிகாரிகள் கூறுகிறார்கள். மூட்டைப்பூச்சி பிரச்சினை தானே என இதை அலட்சியமாக நினைக்க முடியாது. ஏனென்றால் இது மிக விரைவாக நாடு முழுக்க பரவும் ஆபத்து இருக்கிறது. அப்படி இது நாடு முழுக்க பரவினால், அது தென்கொரியாவை மொத்தமாக முடக்கிப் போடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே தென்கொரியா இந்த மூட்டப்பூச்சிகளை ஒழிக்கப் போர்க் கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here