ஜோகூர் பாரு:
மின்னிலக்க நாணய மோசடியில் சிக்கியதால் 42 வயது ஆடவர் ஒருவர், ஒரு மில்லியன் ரிங்கிட்டை இழக்க நேரிட்டது.
மலேசியாவின் ஜோகூர் பாருவைச் சேர்ந்த அந்த ஆடவர் ஒருவர், தான் மோசடிக்கு ஆளானது குறித்து நவம்பர் 18ஆம் தேதியன்று போலீசில் புகார் அளித்ததாக அதிகாரிகள் கூறினர்.
கைப்பேசி செயலி ஒன்றைப் பயன்படுத்தி மின்பண முதலீடு செய்யலாம் என்று வெளிநாட்டவர் ஒருவர் கூறித் தம்மை ஏமாற்றியதாக அந்த ஆடவர் தெரிவித்திருந்தார்.
முதலீடு செய்த ஒரு மணி நேரத்திற்குள் 60% லாபம் கிடைக்கும் என்று மோசடிக்காரர் தமக்கு உத்திரவாதம் அளித்ததாக ஆடவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டுப் பரிவர்த்தனைக்கு வருவாயும் உண்டு என்று மோசடிக்காரர் கூறியுள்ளார்.
அதையடுத்து, ‘பிட்காய்ன்’ முதலீடுகள் என்று கருதி ஆடவர் 989,170 ரிங்கிட் மதிப்பிலான 126 பரிவர்த்தனைகளைச் செய்தார்.
செயலியைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க ஆடவர் முயன்றபோது தமது கணக்கு முடக்கப்பட்டதைக் கண்டு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.