புத்ராஜெயா:
மங்கோலிய அழகி 2006ல் கொல்லப்பட்ட வழக்கில் மலேசிய முன்னாள் காவல்துறை உறுப்பினர் சைருல் அஸர் உமருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மரண தண்டனை குறித்து மறுஆய்வு செய்வதற்கு அவர் எந்த விண்ணப்பமும் செய்யவில்லை என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட அஸிலா ஹட்ரி மட்டுமே, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுஆய்வு செய்ய விண்ணப்பித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
“அஸிலா மட்டுமே மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய விண்ணப்பித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சைருல் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.
சைருலின் மரணதண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி விண்ணப்பம் செய்துள்ளது குறித்து அவரது வழக்கறிஞரிடம் இருந்து எவ்விதத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் சைஃபுதீன் ஞாயிற்றுக்கிழமை நடந்த PKR கட்சிக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அஸிலா தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மரண தண்டனை மறுஆய்வுக்கு விண்ணப்பித்த முதல் 900 கைதிகளில் அஸிலாவும் ஒருவர் என்றும் சிருல் விவகாரத்தில், அவரது மனுவை மறுஆய்வு செய்ய விண்ணப்பம் தாக்கல் செய்ய விரும்பினால், அதை அவரது வழக்கறிஞர்கள் தான் செய்ய வேண்டும்,” என்று மேலும் கூறினார்.
சைருலை நாடு கடத்துமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், அமைச்சர் சைஃபுதீன் அவ்வாறு செய்வதற்கு மரணதண்டனைக்கான மறுஆய்வு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும், அதுவே நடைமுறை என்று கூறியுள்ளார்.
அண்மையில், சைருலை நாடு கடத்தும் பணியைத் தொடங்க மலேசிய அரசாங்கம் அதன் ஆஸ்திரேலிய சகாக்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் தடுப்புக் காவலில் இருந்தபோது, கொலை குறித்து எந்தத் தகவலையும் சொல்லாமல் அமைதிகாப்பதற்கு, தாம் பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களிலிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட் தொகையைப் பெற்றதாக கூறியிருப்பதற்கான விளக்கத்தை சைருல் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் சைஃபுதீன் சொன்னார்.
“சைருல் விசாரிக்கப்படும்போது இதுகுறித்த விவகாரம் எழுப்பப்படவில்லை. ஒரு மில்லியன் பணம் பெற்றிருப்பது குறித்து அவர்தான் கூறியுள்ளார். அதற்கு அவரால் மட்டுமே விளக்கம் தர முடியும்,” என்று அவர் கூறினார்.