கோலாலம்பூர்:
பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் படத்திற்கு தடை விதித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் அறிவிப்பை வரவேற்பதாக மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் இன்று தெரிவித்தார்.
தமிழ் வாழ்த்து – கடவுள் வாழ்த்துக்கு தடைவிதித்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.
எதிர் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் இதுபோன்ற சம்பவங்களில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் பாட்லினா சிடேக் அறிவித்தார்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கை பாராட்டுகிறேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை தேடித் தரும் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.