கோலாலம்பூர்:
இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், நாட்டில் ஒரு வெளிநாட்டவர் மற்றும் 8 உள்ளூர்க்காரர்களுக்கு குரங்கம்மை தொற்றுநோய் (mpox) ஏற்பட்டுள்ளது.
முதல் இரண்டு நோய் சம்பவங்கள் ஜூலை மாதம் கோலாலம்பூரில் பதிவாகியுள்ளன, பின்னர் கடந்த மாதம் சிலாங்கூரில் மூன்றாவது மற்றும் நான்காவது சம்பவங்கள் பதிவாகின.
இது தவிர கடந்த நவம்பர் 5 ஆம் தேதி சரவாக்கில் ஐந்தாவது நோய்த்தொற்றும், மீதமுள்ள நான்கு சம்பவங்களும் சமீபத்திலும் பதிவாகியுள்ளன என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறினார்.
“குரங்கம்மை அறிகுறிகள் உள்ள பயணிகளை முன்கூட்டியே கண்டறிவதற்காக குடிநுழைவுத் துறையுடன் இணைந்து, நாட்டின் அனைத்துலக நுழைவு வாயில்களில் கண்காணிப்பு உள்ளிட்ட நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், அதனைத் தடுக்கவும் அமைச்சகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது என்று சொன்னார் அவர்.
“வெளிநாட்டு மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு முன்னர், குறிப்பாக குரங்கம்மை அல்லது endemic mpox நோய்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இருந்து வரும் மாணவர்களை, 21 நாட்களுக்கு கண்காணித்து, குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.




















