கோலாலம்பூர்:
நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினை தொடர்பில், அரசாங்கம் பல்வேறு திட்ட அமைப்புகளை செயல்படுத்த முயற்சித்த போதிலும், அதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.
இப்பிரச்சினையைக் கையாள்வதில் அரசாங்கத்தின் உறுதியான மற்றும் தீவிரமான முயற்சிகளுக்கு தமது தரப்பு எப்போதும் முழுமையாக ஆதரவளிக்கிறது. அதில் மிக முக்கியமாக நாம் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்என்று MCCF தலைவர் டத்தோஸ்ரீ ஹலீம் இஷாக் தெரிவித்தார்.
அரசு சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் பல முயற்சிகளை கையாண்டுவருகிறது. இருப்பினும், பல இடைத்தரகர்கள் தலையீடுகள் மூலம் இன்னும் எந்த திட்டமும் செயற்பாட்டளவில் வெற்றியடையவில்லை.
“சட்டவிரோதமாக நுழைந்து, நாட்டின் விசாக்கள் அல்லது பணி அனுமதிகளை மீறும் வெளிநாட்டினருக்கு சரமாரியாக கசையடி தண்டனை வழங்குவதன் மூலம் அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, உள்துறை அமைச்சகம் (KDN), தேசிய காவல்துறை (PDRM), மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) மற்றும் உள்ளூர் அதிகாரிகள் (PBT) ஆகியவற்றின் பங்கேற்புடன் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசாங்கம் நிறுவ வேண்டும் என்றும், வெளிநாட்டவர்களின் நுழைவு அமைச்சினால் முழுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் இடைத்தரகர்கள் அல்லது முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு அணுகுமுறையை அகற்ற வேண்டும் என்றும் ஹலீம் கூறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாகத் தீர்க்கப்படாத இப்பிரச்சினைகள் தொடர்பாக ஒத்துழைப்பையும் விரிவான தீர்வுகளையும் பெற வெளிநாட்டினரைக் கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ள அரசு சாரா நிறுவனங்களை (NGO) அழைக்குமாறும் MCCF மலேசிய குடிநுழைவுத் துறை டைரக்டர் ஜெனரலைக் கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.
























