பாரீஸ்: இந்தியர்கள் உள்பட 303 பயணிகளுடன் சென்ற விமானம் ஆள்கடத்தல் தொடர்பான சந்தேகத்தில் பிரான்ஸ் நாட்டில் சிறை பிடிக்கப்பட்டது. இதில் தமிழ் பேசும் மக்கள் இருந்த நிலையில் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல் வெளியான நிலையில் 303 பயணிகளுடன் அந்த விமானம் பிரான்சில் இருந்து புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி கடந்த 21ம் தேதி ரோமானியன் நிறுவனமான லெஜன்ட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏ340 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் 303 பேர் இருந்தனர். இதில் பெரும்பலானவர்கள் இந்தியர்கள்.மேலும் சிலர் தமிழ் மொழியிலும் பேசினர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? இலங்கையை சேர்ந்தவர்களா? என்பது தெரியவில்லை. இவர்கள் சென்ற விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே பறந்து சென்று கொண்டிருந்தது.
பாரீசில் இருந்து கிழக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் 22ம் தேதி இந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து பிரான்ஸ் அதிகாரிகள் விமானத்தை தரையிறக்கம் செய்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் விமானத்தில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் சிலர் சட்டவிரோதமாக நிகரகுவாவில் இருந்து அமெரிக்கா, கனடா செல்லும் பிளானை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து பிரான்சில் இருந்து அந்த விமானத்தை பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 3 நாட்களுக்கு பிறகு இன்று காலையில் அந்த விமானம் பிரான்சில் இருந்து நிகரகுவா நோக்கி பயணிக்க உள்ளது.
முன்னதாக 3 நாட்களாக விமானம் பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்டதால் அதில் பயணித்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.




















