கோல திரெங்கானு:
நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து திரெங்கானுவில் உள்ள எட்டு ஆறுகள் அபாய அளவை தாண்டியுள்ள நிலையில், ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை நிலைகளிலும், ஏனைய இரண்டு ஆறுகள் எச்சரிக்கை நிலைக்கு அண்மித்தும் காணப்படுகின்றன.
நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Public InfoFlood இணையத்தளத்தின் அடிப்படையில், உலு திரெங்கானுவில் மூன்று ஆறுகள், டுங்குனில் இரண்டு, கெமாமானில் இரண்டு மற்றும் செத்தியூவில் ஒன்று என எட்டு ஆறுகள் அபாய அளவைக் கடந்துள்ளன.
இந்நிலையில் திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 118 குடும்பங்களைச் சேர்ந்த 439 பேர் டுங்கூனில் உள்ள ஒன்பது நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் செத்தியூவில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று திரெங்கானு JPBN தெரிவித்துள்ளது.
மேலும் உலு தெரெங்கானுவில் 113 குடும்பங்களைச் சேர்ந்த 302 பாதிக்கப்பட்டவர்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு அங்குள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் நேற்று இரவு திறக்கப்பட்ட வகாஃப் தபாய் சிவிக் ஹாலில் திறக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.