பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். ஆனால் தற்போது 10.15 மணியைக் கடந்தும் விமானம் இன்னும் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர்.
பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்துள்ளனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், விமான நிலையம் தொடர்பான எந்த ஒரு விவரத்தையும் அவர் தனது பதிவில் குறிப்பிடவில்லை.

















