சென்னை:
சமூக மேம்பாட்டில் தமிழர்களுக்கு சிறந்த பங்களிப்பையாற்றிவரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு “கனியன் பூங்குன்றனார் விருது” வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ எனும் கருப்பொருளை மையமாக கொண்டு ‘அயலகத் தமிழர் விழா’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் ‘அயலகத் தமிழர் விழா’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.
இதில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், 40-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டதோடு, அயலகத் தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.
உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்கள் 13 பேருக்கு இந்த கனியன் பூங்குன்றனார் பெயரில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.