சிங்கப்பூரில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்திலிருந்து வெளிவந்து ஈராண்டுகளுக்குள் மீண்டும் அப்பழக்கத்துக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டில் அத்தகையோரின் எண்ணிக்கை 30 ஆண்டுகளாகக் காணப்படாத அளவில் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று, சிங்கப்பூர் சிறைச் சேவை வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிய வந்தது.
சென்ற ஆண்டுக்கான புள்ளி விவரங்களை சிங்கப்பூர் சிறைச் சேவை இன்று (14 பிப்ரவரி) வெளியிட்டது.
மேலும், சாங்சி சிறைச்சாலையின் பி5 கழகம், செலாராங் பார்க் நிலையம் ஆகியவற்றில் இருக்கும் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையங்களில் தற்போது 3,981 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. பொதுமக்களின் பார்வைக்கு உள்ள புள்ளி விவரங்களில் இந்தத் தகவல் தெரிய வந்தது.
2021ல் சிங்கப்பூர் சிறைச் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரில் 22 விழுக்காட்டினர் ஈராண்டுகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர், சிறைக்கு அனுப்பப்பட்டனர் அல்லது பகல் நேரத்தில் முன்னிலையாவதற்கான உத்தரவு பெற்றனர். இந்த விகிதம், 2019, 2020ஆம் ஆண்டுகளில் பதிவானதைவிட அதிகமாகும்.
விடுவிக்கப்பட்டோரில் கூடதலானோர் மீண்டும் போதைப் பழக்கத்துக்கு ஆளானதே 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே விதிகம் அதிகரித்ததற்கான முக்கியக் காரணம் என்று சிங்கப்பூர் சிறைச் சேவை தெரிவித்தது.
“போதைப்பொருள் குற்றங்களைப் புரியாதோருடன் ஒப்பிடுகையில் அவ்வாறு செய்தோர், மீண்டும் அக்குற்றங்களைப் புரியும் வாய்ப்புகள் மும்மடங்காகும். அதனால் போதைப் புழங்கிகளுக்கு மறுவாழ்வு வழங்குவதிலும் அவர்களை மீண்டும் சமூகத்துக்குள் சேர்ப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவது முக்கியம்,” என்று சிங்கப்பூர் சிறைச் சேவை குறிப்பிட்டது.