டெல்லி: தெய்வச் சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்வு என்றால் என்ன, சிலைகளுக்கு தங்கத்தில் தேனை தொட்டு கண்களை திறப்பது ஏன் தெரியுமா?. எந்த சுவாமி சிலையாக அதை கல்லாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்படும். இவற்றை ஏனோ தானோ என செய்யக் கூடாது, சிலை வடிவமைப்பதற்கென்றே ஆகம விதிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திதான் சிலைகளை செய்ய வேண்டும்.
இந்த சிலைகளை செய்து முடித்தவுடன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அதன் கண்கள் திறப்பு நிகழ்ச்சி என்பது நடந்து முடிந்தால்தான் இறுதி வடிவம் பெறும். இந்த சிலைகளுக்கு கண்கள் திறக்கப்படுவதற்கு முன்பு அங்க ரத்ன நியாசம் எனப்படும் ஆராதனை செய்யப்படுவது வழக்கம்.
அந்த சிலையின் கண்களை திறக்க போகும் சிற்பி, குளித்துவிட்டு புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பூணூலுடன் நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது நாமம் இட்டுக் கொண்டு விரல்களில் பவித்ரம் அணிந்து கொண்டு இடது தோளில் மேலாடை அணிந்து கொண்டு முழு முதற் கடவுளான விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து சிலைக்கு அருகே அரிசியை பரப்பி அதன் மேல் கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த கலச நீரை கொண்டு உரிய தெய்வத்தை ஆவாஹனம் செய்ய வேண்டும். பிறகு சிற்பியானவர் விராட் விஸ்வ பிரம்மனைத் தியானித்து அவரது அனுமதியுடன் சிலையின் கண்களை திறப்பார்.
தங்கத்தினால் ஆன உளி அல்லது ஊசியை கொண்டு முதலில் வலது கண்ணையும் அடுத்தது இடது கண்ணையும் திறப்பார்கள். ஒரு வேளை அந்த சிலைகளுக்கு பல முகங்கள் இருந்தால் அவற்றில் உள்ள கண்களையும் திறந்துவிடுவார்கள். கண் திறப்பின் போது சிற்பியை தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது. திரையிடப்பட்டுத்தான் இந்த நிகழ்வு நடக்கும்.
பால், பழம், தேன் ஆகியவற்றை கொண்டு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். தேன் உள்ளிட்டவை தூய்மையானது என்பதால் இவற்றை கொண்டு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிலைகளும் திறப்பின் பின் இத்தனை ஐதீகங்களும் மரபுகளும் ஆகம விதிகளும் உள்ளன.