Lyca நிறுவனம் குறித்து அவதூறு; கருத்து தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை

சென்னை:

Lyca நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியா யூடியூப் பக்கத்தில் Lyca நிறுவனத்தை, போதைக் கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ’தமிழக திரை உலகிலும், உலகளவிலும், நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தவிட வேண்டும். இந்த வீடியோ மூலம் கிடைத்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் யூடியூப் பக்கத்தில் உள்ள அந்த வீடியோவை நீக்க உத்தரவிட வேண்டும்’ எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா ஆகியோர், ’யூடியூப்-பில் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்திலியே இது போன்ற அவதூறு கருத்துகளை வெளியிடுகின்றனர். யூடியூப் பக்கத்தில் உள்ள அந்த வீடியோவை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்’ என வாதிட்டனர்.

இதனையடுத்து, லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், யூடியூப்பில் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here