பெங்களூருவில் சிறுமியைத் தத்தெடுத்த விவகாரத்தில் பிக் பாஸ் புகழ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரீல்ஸ் தயாரிப்பதற்காக சிறுமியைத் தத்து எடுத்தாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா(26). பெங்களூருவைச் சேர்ந்த நடிகையான இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக ஊடகங்களில் சோனு கவுடா பகிர்ந்து வந்தார். ஏற்கெனவே குழந்தைகள் தத்தெடுப்பு விவகாரம் தொடர்பாக சோனு கவுடா மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் படரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சோனு கவுடாவை பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஜே.ஜே. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சோனு கவுடாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையைத் தத்தெடுக்க கடும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குழந்தையை தத்து எடுக்க வளர்ப்புத் தாய்க்கும். குழந்தைக்கும் 25 வயது வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால், சோனு கவுடா விவகாரத்தில் குழந்தைக்கு 8 வயதாகிறது. சோனு கவுடாவுக்கு 26 வயதாகிறது. இதனால் அது விதி மீறலாக மாறியுள்ளது. மேலும் ரீல்ஸ் தயாரிக்கும் நோக்கத்தில் சோனு, சிறுமியை தனது விருப்பப்படி பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக அவர் குழந்தையைத் தத்தெடுத்தாரா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.