ஷா ஆலாம்:
KK சூப்பர் மார்ட் பல்பொருள் அங்காடி நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக இன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ள நிலையில், ஷா ஆலாம் அமர்வு நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் கடுமையாக்கத் தொடங்கியுள்ளனர்.
அங்கு பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க நீதிமன்றத்தின் நுழைவாயில் முன்பு காலை 7.30 மணிக்கே போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்ததது தொடர்பில், பொதுமக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பில் KK மார்ட்க்கு எதிராக நேற்றுவரை 178 போலீஸ் புகார்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இவ்வழக்கில் மற்றவர்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தியதாகவும், உணர்வுகளை தூண்டியதற்காகவும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் 109 இன் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




















