மலாக்கா:
கேகே சூப்பர் மார்ட்டில் விற்கப்பட்ட அல்லாஹ் என்ற வாசகம் கொண்ட காலுறை தொடர்பான சர்ச்சையைக் கையாள்வதில் டாக்டர் முகமட் அக்மல் சாலேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் 68 வயது மெக்கானிக் ஒருவர் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
குறித்த கொலை மிரட்டல் தொடர்பில் நேற்றிரவு (மார்ச் 26) கன்டாங் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அதே நாளில் இங்குள்ள புக்கிட் டுயோங்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தென்மலாக்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
எவ்வாறாயினும், சந்தேக நபர் உடல் நலக்குறைவாக இருந்ததால், வாக்குமூலம் எடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அம்னோ இளைஞர் தலைவரும் மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமானருமான டாக்டர் சாலேயின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 62 வயதான மலாக்கா கல்வித் துறையின் ஓய்வுபெற்ற குமாஸ்தா ஒருவர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
குற்றவியல் மிரட்டலுக்காக தண்டனைச் சட்டம் பிரிவு 506 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று கூறிய ACP கிறிஸ்டோபர், குறித்த கொலை மிரட்டல் தொடர்பில் டாக்டர் முஹமட் அக்மல், நேற்று மாலை 5.30 மணிக்கு ஜாசின் போலீஸ் தலைமையகத்தில் புகாரை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.