போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் தயார் -இயக்குநர் அமீர் உறுதி

ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தொடர்புடைய தொழில் கூட்டாளிகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் அமீர், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பராகவும், அவர் தயாரிப்பில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வந்தார். ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த திரைப்பட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பபட்டதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின.

இச்சூழலில் இயக்குநர் அமீர், போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், “நான் இந்த விசாரணையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக உள்ளேன். கொஞ்சமும் தயக்கமுன்றி என் தரப்பில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, 100 சதவீதம் வெற்றியோடு திரும்புவேன். இறைவன் மிகப்பெரியவன்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here