கோலாலம்பூர்:
“அல்லாஹ் காலுறை விவகாரம்” தொடர்பில் KK Supermart நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஶ்ரீ டாக்டர் கேகே சாய் கீ கான் மாட்சியமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கோரினார்.
இன்று (ஏப்ரல் 3) இஸ்தானா நெகாராவில் 15 நிமிடங்கள் நடந்த ஒரு சந்திப்பில், KK Supermart கன்வீனியன்ஸ் ஸ்டோரின் சில கிளைகளில் ‘அல்லாஹ் ‘ என்று எழுதப்பட்ட காலுறைகளை விற்பனை செய்தது தொடர்பான தவறை மன்னிக்குமாறு பேரரசர் மற்றும் அனைத்து முஸ்லிம்களிடமும் டாக்டர் சாய் மன்னிப்பு கேட்டார், அத்தோடு இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காது என்றும் அவர் உறுதியளித்தார் என்று மேன்மை தங்கிய மாமன்னர் இன்று வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, விற்கப்படும் பொருட்கள், குறிப்பாக இறக்குமதி செய்து விற்கும் பொருட்கள் குறித்து, அதிக கவனத்துடன் இருக்குமாறு, KK Supermart உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்துவதாக பேரரசர் இப்பதிவில் கூறினார்.
“நாட்டின் இன, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிடுவது உட்பட எந்தக் கட்சியும் இந்த விஷயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது” என்றும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சொன்னார்.