ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் நேற்று முந்தினம் (ஏப்ரல் 13) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு சுலாவேசி மாநிலத்தின் டானா டொராஜா வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) மாலை பல சடலங்கள் அகற்றப்பட்டதாகவும், இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவரான சுலைமான் மாலியா கூறினார்.
“19 பேர் உயிரிழந்ததாகவும், அதில் தெற்கு மக்காலேயில் நால்வரும் மக்காலேயில் உள்ள மற்ற கிராமங்களில் 15 பேரும் அடங்குவர்,” என்று அவர் நேற்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“இருவரைக் காணவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மற்றவர்களைத் தேடும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்றும் அவர் சொன்னார்.
டானா டொராஜாவும் அதன் சுற்று வட்டாரங்களும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் பாதிப்பு அதிகம் இருந்ததாக மாலியா தெரிவித்தார்.