இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் மீது பொருளாதார தடையாம்! அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி

நியூயார்க்: இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் துணை தூதரகம் மீது வான் வாழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என்று உலகத்திற்கே தெரியும். எனவே கடந்த 1ஆம் தேதி, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. ஏப்.14ம் தேதி இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதை அமெரிக்கா முன்னரே மோப்பம் பிடித்துவிட்டது. எனவே இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்நிலையில் தங்களது எச்சரிக்கையை மீறியதற்காக ஈரான் மீது பொருளாதார தடையை அறிவித்திருக்கிறது அமெரிக்கா. பிரிட்டனும் அமெரிக்காவுடன் கைகோர்த்து பொருளாதார தடையை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

உலக நாடுகளுக்கு ஈரான் அதிக அளவில் எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது. இது அந்நாட்டின் வருவாயில் கணிசமான பங்கு வகிக்கிறது. எனவே இதனை பாதிக்கும் வகையில் பொருளாதார தடைகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஈரானின் ராணுவ நடவடிக்களை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா துடித்துக்கொண்டிருக்கிறது. பிரிட்டனும் தனது பொருளாதார தடை குறித்து விரைவில் விரிவாக விவரிக்கும் என்று சொல்லப்படுகிறது. முதலில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இது உலகமறிந்த ரகசியம். ஆனால், இஸ்ரேலை கண்டிக்காமல், தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்திய ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது? என்கிற கேள்வியை சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here