ஜோகூர் பாரு:
உலு திராம் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, இரு காவலர்களை கொன்று, மூன்றாவது காவலரைக் காயப்படுத்திய ஆடவர், ஜமா இஸ்லாமியா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், ஆனால் தனியாகச் செயல்பட்டார் என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மொத்தம் 46 நபர்களை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்நிலையில், சந்தேக நபர் காவல்துறையினருடன் சண்டையிடத் தயாராக, ஒரு பையில் கவசம் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டுவந்திருந்தார் என்றும், “அவரது நோக்கம் காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்துச் செல்வது என்றும், பறிக்கும் ஆயுதங்களை பிற்காலத்தில் அதைத் தங்கள் சதித்திட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கக்கூடும்,” என்றும் தேசிய போலீஸ்படை தலைவர் ரஸாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோகூரில் இயங்கிவருவதாக நம்பப்படும் ஜமா இஸ்லாமியா உறுப்பினர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும்படி காவல்துறையின் சிறப்புப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளதாக நேற்று நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.




















