பெனாம்பாங் வெள்ளம்: பெண் ஒருவர் பலி

பெனாம்பாங்:

நேற்று இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 37 வயது பெண்ணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜாலான் பெனாம்பாங் பைபாஸ் சந்திப்பைச் சுற்றி ஓடிய பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணியளவில் அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சமி நியூட்டன் தெரிவித்தார்.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது, ஆனாலும் வேகமாக பாயும் நீர் மற்றும் அதிக அலை காரணமாக மீட்பு நடவடிக்கையில் பல சவால்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

“அந்தவகையில் இன்று காலை பாதிக்கப்பட்டவரின் உடல் மரத்தில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது” என்று அவர் இன்று பெனாம்பாங் கலாச்சார மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

நேற்று நண்பகலில் பெய்த கனமழையைத் தொடர்ந்து நேற்று பெனாம்பாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது முதல் உயிரிழப்பு என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here