பெங்களூரு:
“எனக்கும், எந்த முறைகேட்டுக்கும் தொடர்பும் இல்லை. இத்தகைய நிலையில் நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?” என, மேலவையில் முதல்வர் சித்தராமையா கூறினார். இதன் வாயிலாக, வால்மீகி ஆணையம், ‘மூடா’ ஊழல் விவகாரத்தில் தன்னிடம் ராஜினாமா கேட்கும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
கர்நாடகா வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேடு ஆகிய இந்த இரண்டு முறைகேடுகளையும் அஸ்திரமாக பயன்படுத்தி, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் திணறடிக்கின்றன.
கடந்த வாரம் முழுதும், வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா நடத்தினர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபையில் முதல்வர் நீண்ட விளக்கம் அளித்தார்.
ஆனாலும் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். நேற்று கர்நாடக மேலவையில் முதல்வரிடம் ராஜினாமா கேட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.




















