குழந்தை கண்ணனின் பாத ரகசியம்

கிருஷ்ணரின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் விதமாக பல விதமான சடங்குகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதில் ஒன்று தான் வீடுகளில் குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து, வழிபடுவது. எதற்காக கிருஷ்ணரின் பாதங்களை வீடு முழுவதும் வரைகிறோம்? இதற்கு என்ன அர்த்தம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ண ஜெயந்தி

மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மாதம் 10ம் தேதி திங்கள்கிழமையான ஆகஸ்ட் 26ம் தேதி அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை நேரத்தில் வீட்டினா வாசலில் துவங்கி, பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாத சுவடுகளை கோலமாக வரைந்து, பூஜை அறையில் கிருஷ்ணரின் படத்தை அலங்கரித்து, பல விதமான பட்ஷணங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது நம்முடைய வழக்கம்.

பாதம் வரைவதன் காரணம்

நாரத முனிவர் ஒரு சமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்ற போது அனைவரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதே போல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவ பெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் திருவடிக் கோலம் போடுகிறார்கள். கிருஷ்ணர் 8 வகையாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

கிருஷ்ணரின் 8 வகை கோலங்கள்

* சந்தான கோபால கிருஷ்ணர் – யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

* பால கிருஷ்ணன் – தவழும் கோலம்.

* காளிய கிருஷ்ணன் – காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

* கோவர்த்தனதாரி – கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கும் கோலம்.

* ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) – வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

* முரளீதரன் – இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம்.

* மதன கோபால் – அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

* பார்த்தசாரதி -அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிருஷ்ண பாத ரகசியம்

கிருஷ்ணரின் பாதங்களை தாமரை பாதங்கள் என்பார்கள். தாமரை, சேற்றில் முளைத்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் மேலே உயர்ந்து நிற்கும். அது போல உலக இன்பங்களாக சேற்றை விட கிருஷ்ணரின் கருணை உயர்ந்தது என காட்டுதாகும். கிருஷ்ணரின் வலது பாதத்தில் 11, இடது பாதத்தில் 8 என அனைத்து புனித சின்னங்களும் கிருஷ்ணரின் திருவடிகளில் உள்ளது. சங்கு, சக்கரம், வில், ஸ்வஸ்திக், தாமரை, பிறை சந்திரன், மீனம் பஜ்ராயுதம் உள்ளிட்ட பலவிதமான ஆயுத சின்னங்கள் உள்ளன. இவைகள் இருக்கும் இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகும். தீமைகள் எதுவும் நெருங்காமல் பக்தர்களை காக்கும். இது தான் கிருஷ்ணரின் பாதத்தை தரிசிப்பதற்கும், பாதங்களை வீடுகளில் வரைவதற்கு, வைத்து வழிபடுவதற்குமான காரணம்.

கிருஷ்ணரை அழைக்கும் முறை

இவ்வாறு 8 வகைகளில் காட்சித்தரும் கிருஷ்ணரின் பாதத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது. இந்த எட்டு கோலங்களில் எந்த ரூபத்தில் கண்ணனை நீங்கள் நினைத்து அழைத்தாலும், அந்த வடிவில் அவர் எழுந்தருளுவார். கிருஷ்ணரின் பாதம் வரைவது, அவரை ஆரத்தி எடுத்து, வீட்டு வாசலில் இருந்து, பூஜை அறை வரை அழைத்துச் சென்று, எழுந்தருள செய்வதற்கு சமமானதாகும். பக்தியுடன், மனதில் சந்தோஷத்துடன் கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைத்தால் அவர் உண்மையாகவே நம்முடைய வீட்டில் எழுந்தருளி, நமக்கு அருள் செய்து, நம்முடைய கஷ்டங்களை தீர்த்து, வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். பட்ஷணங்கள் எதுவும் செய்ய வசதி இல்லை என்றாலும் குலேசரை போல் ஒரு பிடி அவல் வைத்து, கண்ணனை வா என மனதார அழைத்து வழிபட்டால், நம்முடைய அழைப்பை ஏற்று, ஓடோடி வருவான் குழந்தை கண்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here