கோலாலம்பூர்:
வெளிநாட்டவரை மணமுடித்த மலேசியப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமைத் தகுதியளிக்கும் மசோதாவுக்கு நேற்று நாடாளுமன்றம் ஒப்புதல் கிடைத்துள்ளது.
பல மாதங்கள் நிலுவையில் போடப்பட்ட இந்த மசோதாவிற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. முன்னதாக குறித்த மசோதாவில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவுகளுக்கு பொதுநலன் விரும்பிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைத் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது நேற்று வியாழக்கிழமை (அக்.17) வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 222 உறுப்பினர்களில், மூன்றில் இரு பங்கிற்கும் மேல், அதாவது 206 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
சட்டத்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, மலேசியாவில் நிரந்தரவாசிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, விண்ணப்பம் எதுவுமின்றி தானாகவே குடியுரிமை வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் நிரந்தரவாசிகளின் குழந்தைகளுக்கு நிரந்தரவாசத் தகுதி மட்டுமே வழங்கப்படும். இருப்பினும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, குடியுரிமை கேட்டு அந்தக் குழந்தைகள் பின்னர் விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















