NSRC எனப்படும் தேசிய மோசடி நடவடிக்கை மையம் இதுவரையில் ஆன்லைன் மோசடிக் குற்றங்கள் தொடர்பில் 19 பில்லியன் ரிங்கிட் தொகையை முடக்கியுள்ளது. அதுமட்டுமன்றி இதுவரையில் 6 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்துள்ளது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது NSRC தரப்புடன் தேசிய நிதி குற்றத்தடுப்பு மையம், பேங்க் நெகாரா, போலீஸ் படை, மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம், நிதி – தொடர்பு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து மேற்கொண்ட முயற்சிக்கான வெற்றி என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
NSRC தொடங்கப்பட்ட நாள் முதல் இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரையில் மொத்தமாக 140,474 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அதில் 69,000 அழைப்புகள் மோசடிச் சம்பவம் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்டவை என்று மக்களவையில் அமைச்சர்களுக்கான கேள்வி பதில் நேரத்தில் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் கடன் உரிமம் குறித்து அரசாங்கம் மறு ஆய்வு செய்யுமா? மோசடி விவகாரங்களையும் வங்கி மேலாண்மையில் குழப்பங்களையும் அரசாங்கம் எவ்வாறு தீர்க்கும் என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹாய்சான் காயாட் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் கேள்விக்குப் பதிலளித்த நிதியமைச்சருமான அன்வார். மேற்கண்ட தகவல்களைப் பகிர்ந்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் ஆன்லைன் குற்றங்கள் காரணமாக 1.224 பில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் மோசடி, பல்லூடகக் குற்றங்கள், இ-நிதி மேலாண்மை, காதல் மோசடி, இல்லாத முதலீட்டுத் திட்ட மோசடி உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் இன்னும் அதிகமானோர் மோசடியில் ஏமாற்றப்படுவதை தடுப்பதற்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய 1.4 பில்லியனுக்கும் மேற்பட்ட அழைப்புகளும் 1, 2 பில்லியனுக்கும் மேற்பட்ட எஸ்எம்ஸ் குறுஞ்செய்திகளும் தொடர்பு நிறுவனங்களால் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தொடர்பு பல்லூடக ஆணையமும் 118,184 இணைப்புகளை துண்டித்ததோடு உறுதிப்படுத்தப்பட்ட 9,47 போலி அகப்பக்கங்களையும் முடக்கியுள்ளது. மேலும் கடந்த அக்டோபர்ன் 31ஆம் தேதி வரையிலான சேமாக் மூவில் தள தரவின்படி 181,628 தொலைபேசி எண்கள், 222,092 வங்கிக் கணக்குகள், 1,395 நிறுவனப் பெயர்களும் ஆன்லைன் மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளமானது பேருதவியாக இருக்கின்றது. காரணம் மொத்தமாக 32,066,000 முறை தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு 22,200,984 முறை நேர்மறையான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமன்றி 1998 தொடர்பு- பல்லூடகச் சட்டம் பிரிவு 233க்கு திருத்தம் மேற்கொண்டது. ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதா வரையறுக்கப்பட்டது. NSRC-யின் தொடர் நடவடிக்கைகள் என ஆன்லைன் குற்ற விவகாரங்களை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் விவரித்தார்.





















