யாழ்ப்பாணம்:
நேற்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் அனுர குமார திஸ்ச நாயக்க பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
வல்வெட்டித்துறை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர். அங்கு இலங்கை அதிபர் அனுர நேற்று வருகை தந்தார்.
அங்கு தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழர்கள், சிங்களர்கள், பெளத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொண்டாடும் வகையிலான தேசிய திருவிழா அக்டோபர் மாதம் நடத்தப்படும்.
நமது அனைத்து சமுதாயங்களின் கலாசாரம், உணவு, வாழ்க்கை முறையை கொண்டாடும் வகையில் இந்த விழா இருக்கும் என்றார்.
நாம் ஒருவருக்கொருவர் தள்ளியிருந்தாலும், நமது குழந்தைகள் தள்ளியிருப்பதற்கு விட்டு விடக்கூடாது. நமது தலைமுறை போர் செய்திருக்கலாம்; நம் குழந்தைகளின் தலைமுறை போரிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து செயல்படும் நாடாக நம் நாட்டை உருவாக்குவோம்.
இவ்வாறு அனுர பேசினார்.




















