
பூச்சோங்,
இஸ்லாம் அல்லாதவர்களுக்காக பிரதமர் துறையில் அமைச்சருக்குரிய ஒரு துறை உருவாக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுத் தெரிவித்தார். இந்தப் பரிந்துரையை அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்தாக அமைச்சரவை பார்க்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நம்மிடம் சமயத் துறைக்கு அமைச்சர் இருக்கிறார். ஒற்றுமைத் துறைக்கு அமைச்சர் இருக்கின்றார்.
மலேசியாவில் உள்ள அனைத்துச் சமூகங்களையும் சமயங்களையும் பிரதிநிதிக்கக்கூடிய ஒரு சிறப்புக் குழுவும் உள்ளது. இதுவே போதுமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பூச்சோங் பெர்டானாவில் உள்ள அஸ் -சலாம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமைத் தொழுகையை மேற்கொண்ட பின் அவர் இதனை நிருபர்களிடம் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை மக்களவையில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் செள இயூ ஹுய், இஸ்லாம் – இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களைக் கவனிக்க பிரதமர்துறை அமைச்சர் அந்தஸ்துடைய இரண்டு துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நாட்டிலுள்ள பல இன மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் யாரும் ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இந்தப் பரிந்துரை தேவைப்படுகிறது என்றும் சௌ கூறியிருந்தார். இந்தப் பரிந்துரைக்கு அம்னோ,அமானா, கெஅடிலான் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.




















