சிப்பாங்:
RM1 மில்லியன் மதிப்புள்ள கோக்கைனை மலேசியாவிற்குள் கடத்த முயன்றபோது தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 இல் நடத்தப்பட்ட சாமான்கள் சோதனையைத் தொடர்ந்து, RM1.05 மில்லியன் மதிப்புள்ள சுமார் 5.22 கிலோ கோக்கையின் பறிமுதல் செய்யப்பட்டது என்று, சுங்கத் துறையின் (மத்திய மண்டலம்) துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அஹ்மத் தௌபிக் சுலைமான் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 18 அன்று மாலை 7 மணியளவில் இந்த முயற்சி கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“சோதனைகளின் அடிப்படையில், அந்தப் பெண் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் மலேசியாவிற்கு வந்திருந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர் மீது 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B (1)(a) இன் கீழ் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது குற்றம் நிரூபிக்கப்படடால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.
கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 1800-88-8855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள சுங்கத் துறை அலுவலகத்திற்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளங்கள் கண்டிப்பாக தனிப்பட்டதாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.





















