இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று வியாழக்கிழமை (ஜூலை 19) காலை இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அதன் தென் பகுதியிலும் ஈரான் ஆகாயத் தாக்குதல் செய்தது. அதில் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் நகருக்குள் விழுந்ததாகக் கூறப்பட்டது.
ஏவுகணைகளில் ஒன்று பீர்ஷெபாவில் உள்ள சோரோக்கா மருத்துவமனையில் விழுந்தது. அதில் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏவுகணைத் தாக்குதலில் தப்பிக்கப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்போது மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
மருத்துவமனைமீது தாக்குதல் நடத்திய ஈரானிய பயங்கரவாதிகளுக்குக் கடுமையான பதிலடி தரப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஈரான்மீதான தாக்குதல்களை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
“ஈரானின் தாக்குதலில் மருத்துவமனை சேதமடைந்துள்ளது. மற்ற சில பகுதிகளும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் சோரோக்கா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். காயமடைந்தவர்களுக்கு உதவி வருகிறோம்,” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அதன் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை காஸாவில் காயமடைந்த இஸ்ரேலியப் போர் வீரர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நிலையமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.



















