கோலாலம்பூர்:
பினாங்கு, பட்டர்வொர்த் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டுத் தாக்குதல் ஒரு கும்பல் குற்றச்செயலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான 40 வயது வணிகர், முன்னதாக நான்கு குற்ற வழக்குகளில் உள்ளவர் என்றும், அவர் கடந்த காலத்தில் கும்பல் உறுப்பினராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பினாங்கு துணை போலீஸ் தலைவர் அல்வி ஸைனல் அபிடின் கூறினார்.
சம்பவத்தின் போது, வணிகர் தன் மகனுக்காக காத்திருந்தபோது, இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து அவரது நான்கு சக்கர வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவர் உடனே இருக்கையை பின்னோக்கி சாய்த்து தன்னை காப்பாற்றியுள்ளார், துப்பாக்கி சூடு நடத்திய இருவரையும் அவர் அறிவார் என நாங்கள் சந்தேகிக்கிறோம், எனினும் அவர் மறுக்கிறார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அல்வி ஸைனல் அபிடின் கூறினார்.
தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராயும் வகையில், பினாங்கு போலீசார் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அவர்.




















