மலாக்கா,
மலாக்கா மாநிலம் செங் டெக்னாலஜி பூங்காவில் உள்ள ஒரு Toys கடையில் நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில், RM105,000 மதிப்புள்ள 351 ஏர்சாஃப்ட் (airsoft) துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கடை கடந்த ஒரு வருடமாக இயங்கி வந்துள்ளது என்றும், போலித் துப்பாக்கிகள் விற்க அனுமதி தேவைப்படும் நிலையில், உரிய லைசன்ஸ் இல்லாமல் விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், 42 வயதுடைய கடை பராமரிப்பாளரைக் கைது செய்ததாகவும், இவர் சட்டப்படி தேவைப்படும் அனுமதியின்றி ,போலித் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ துல்கஹிரி முக்தார் கூறினார்.
இந்த வகை பொம்மை துப்பாக்கிகள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடும் என்ற காரணத்தால், இதற்கான விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், கடை உரிமையாளரை தற்போது தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிகளுடன் ஏர்சாஃப்ட் புல்லெட்டுகளும் விற்கப்பட்டதாகவும், தவறாக பயன்படுத்தப்படும் பட்சத்தில் அது காயங்கள் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிகளை RM20-RM30 விலைக்கு வாங்கி, RM200-RM300 விலைக்கு ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை செய்துள்ளதை ஆரம்ப விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக போலீஸ் தெரிவிக்கின்றது.
























