கோலாலம்பூர்,
Sulawesi கடலில், கடல் எல்லை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் இந்தோனேசியா இணைந்து “கூட்டு வளர்ச்சி ஒப்பந்தம்” (Joint Development Agreement – JDA) அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் ஹசன் தெரிவித்தார்.
இது இரண்டு நாடுகளுக்குமான சிறந்த தீர்வை கண்டுபிடிக்க ஒரு ஆரம்ப நடவடிக்கையாகும் என அவர் கூறினார். “தற்போது இது ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் தான் உள்ளது. எந்த ஒரு முடிவும் இருதரப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்,” என அவர் இன்று நாடாளுமன்ற பேரவையில் கேள்வி-பதில் அமர்வில் தெரிவித்தார்.
மலேசியா-இந்தோனேசியா இடையிலான கடல் எல்லை வரையறை தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் கூட்டுப் பேச்சுவார்த்தை நடைபெறும் வகையில் கூட்டாட்சி அரசாங்கம் சபா மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பாரிசான் கட்சியைச் சேர்ந்த கோத்தா பெலுட் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்நரைஸ்ஸா முனிரா மாஜிலிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, Sulawesi கடலில் உள்ள ND6 மற்றும் ND7 பகுதிகளில் JDA அமைப்பதற்கான திட்டம் மலேசியா-தாய்லாந்து கூட்டு வளர்ச்சி ஆணையத்தின் (Malaysia-Thailand Joint Development Authority – MTJDA) மாதிரியைப் பின்பற்றுமா அல்லது வேறு முறையை பின்பற்றுமா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விளக்கினார்.
இதில், மலேசிய ஒப்பந்தம் 1963 (MA63) உடன்படிக்கை அடிப்படையில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.




















