கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் ஃபட்சல் அரங்கில் (Negeri Sembilan Futsal Arena), ஜோகூர் டாருல் தாக்சிம் (JDT) அணிக்கு எதிரான ஆட்டத்தில், 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிறகு, சபா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரோஜர் ஃபெலிப் (Roger Filipe) அவரது சொந்த துணைப் பயிற்சியாளரால் தாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தும், அந்த வெற்றியைத் தக்கவைக்கத் தவறிவிட்டது. இந்தத் தாக்குதல் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, பலத்த விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, போட்டியின் அதிகாரிகள், நடுவர்களிடமிருந்து முழுமையான அறிக்கைகள் பெறப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பப்படும் என்று மலேசியக் காற்பந்து சங்கத்தின் (FAM) பொதுச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மான் (Datuk Noor Azman Rahman) உறுதிப்படுத்தினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் இடைநீக்கம், அபராதம் போன்ற தண்டனைகளைச் சந்திக்க நேரிடும். இந்தச் செயல், விளையாட்டு துறையின் விதிமுறைகளை மீறுவதாகவும், சபா அணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.



















