கிளந்தான்–தாய்லாந்து எல்லை: சட்டவிரோத துறைமுகங்கள் அகற்றும் நடவடிக்கை அக்டோபரில் தொடக்கம்

கோத்தா பாரு,

அரசின் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கிளந்தான்–தாய்லாந்து எல்லைப் பகுதிக்குட்பட்ட சட்டவிரோத துறைமுகங்கள் அக்டோபர் மாதம் முதல் இடிக்கப்பட உள்ளன என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசுப் மமாட் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இவை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 212 சட்டவிரோத துறைமுகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 153 அரசு நிலத்தில் உள்ளவை அகற்றப்படவுள்ளன. தனியார் நிலங்களில் உள்ள மீதமுள்ள துறைகள் தொடர்பாக தும்பாட், பாசிர் மாஸ் உள்ளிட்ட மாவட்டங்களின் உள்ளூராட்சி அமைப்புகள் மேலாய்வு செய்யும் என்று அவர் கூறினார்.

அரசின் நிலத்தில் உள்ள துறைகளுக்கு அறிவிப்புகள் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த எதிர்ப்பும் எழவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த அகற்றும் நடவடிக்கை, மாவட்ட நில அலுவலகத்தின் தலைமையில் பல்வேறு துறைகள் இணைந்து நடத்தப்படவுள்ளது. போலீசார் பங்கேற்று எந்தச் சம்பவமும் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

மேலும், சுங்கை கோலொக் நதிக்கான முழுமையான ஆற்றுப் பகுதி மேம்பாட்டு திட்டம் (IRBM) முதல் கட்டத்தின் கீழ், பாசிப் பக் அந்தா மற்றும் பக் தே கானா எனும் இரண்டு காவல் நிலையங்கள் செப்டம்பர் 7 அன்று போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நிலையங்கள் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு வேலி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 நிலையங்களும் படிப்படியாக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எல்லைப் பிரச்சினைகள் என்பது பாதுகாப்பை மட்டுமல்லாது, நாட்டின் சுயாட்சியையும் சார்ந்தது. கிளந்தான் எல்லை, போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட கடத்தல் செயல்பாடுகளுக்கான அதிக ஆபத்தான நுழைவு புள்ளியாக உள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here