லண்டன்:
பாலஸ்தீனுக்கு ஆதரவாகச் செயல்படும் பாலஸ்தீன் ஆக்சன் (Palestine Action) அமைப்பை பிரிட்டன் அரசு தடை செய்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை (அக்டோபர் 4) மாலை லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய லண்டனின் டிராபல்கர் சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
சில நாட்களுக்கு முன் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் நடைபெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததை அடுத்து, அதிகாரிகள் இவ்வார இறுதியில் எந்தவிதப் பேரணியும் நடத்தக்கூடாது என எச்சரித்திருந்தனர். எனினும், ஏற்பாட்டாளர்கள், “தாக்குதல் நடைபெறும் முன்னரே அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியிருந்தோம்” எனக் கூறினர்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டத்தை கைவிடுமாறு அதே நாளின் காலை சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
“ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிடுவோர், பிரிட்டனில் வாழும் யூதர்களின் உணர்வுகளை நினைவில் கொள்ள வேண்டும். வழிபாட்டுத் தளத்தில் நடந்த தாக்குதலுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். பதற்றத்தை அதிகரிக்காமல், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால், எச்சரிக்கையை மீறியும் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள், பாலஸ்தீன் ஆக்சன் அமைப்புக்கு ஆதரவாக கையில்தட்டிகள் (drums) ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
காவல்துறையினர் இடையூறு செய்தபோது, போராட்டக்காரர்கள் கைதட்டியும் கோஷங்களும் எழுப்பினர். இறுதியில், மொத்தம் 442 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “அமைதியாகக் குரல் கொடுப்பவர்களை கைது செய்வது ஏமாற்றமாக உள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்”என்று தெரிவித்தனர்.
செப்டம்பர் மாதத்திலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.





















