கோலாலம்பூர்:
மலேசியாவின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், மாடானி அரசாங்கம் 2026 ஆம் ஆண்டில் 4,500 ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
2023 முதல் 2025 வரையிலான காலத்தில் ஏற்கனவே 12,900 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரப் பணியிடங்களைப் பெற்றுள்ளனர். அதேபோல், இந்த ஆண்டில் மட்டும் 833 ஒப்பந்தச் செவிலியர்கள் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும், சுகாதார அமைச்சின் பயிற்சி கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறும் 935 புதிய செவிலியர்களுக்கும் 2026 ஆம் ஆண்டில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த நடவடிக்கைகள், சுகாதாரப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பையும், நாட்டின் மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்துவதிலும் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.





















