கோலாலம்பூர்:
இரவு 8 மணி நிலவரப்படி, கெடா, பினாங்கு மற்றும் பேராக்கில் மொத்தம் 5,788 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கெடாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது, பாடாங் தெராப் மற்றும் சிக் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று பிற்பகல் நிவாரண மையங்களில் தங்கியிருந்த 1,562 பேருடன் ஒப்பிடும்போது, இரவு 8 மணி நிலவரப்படி மொத்தம் 1,708 பேராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டஅனைவரும் அங்குள்ள 18 PPSகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூலிமில் அதிகபட்சமாக எட்டு PPSகளில் 1,113 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து பாலிங்கில் ஐந்து PPSகளில் 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பினாங்கில், நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, குறிப்பாக வடக்கு செபெராங் பிறை (SPU) மற்றும் மத்திய செபெராங் பிறை (SPT) ஆகியவற்றில் வெள்ளத்தால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,
சமூக நலத்துறையின் (JKM) சமீபத்திய புதுப்பிப்பின்படி, SPU, SPT மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,187 ஆக அதிகரித்துள்ளது, முன்னதாக 1,052 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதேநேரம் பேராக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான லாருட் மாடாங் செலாமா (LMS), மஞ்சுங், கெரியான் மற்றும் பேராக் தெங்கா ஆகியவற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 2,963 இல் இருந்து இரவு 2,893 ஆக சற்றுக் குறைந்துள்ளது, பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள 28 PPS இல் தஞ்சம் புகுந்துள்ளனர்.





















