கோலாலம்பூர்:
கேமரன் ஹைலேண்ட்ஸ், தானா ராட்டா பகுதியில் நவம்பர் 17 முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு பதின்மவயது சிறுமிகள் இன்று அதிகாலை கெடா மாநிலத்தின் போக்கோக் சேனாவில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
15 வயதான நூருல் சியுஹாதா முகமட் பைசல் மற்றும் 14 வயதான நூர் தாமியா கைஸ்யாரா முகமட் சயுதி ஆகியோர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஒரு நண்பரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று, கேமரன் ஹைலேண்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் அஸ்ரி ராம்லி தெரிவித்தார்.
“பெற்ற தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, இரு சிறுமிகளும் அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கெடாவுக்கு ஒரு நண்பரைத் தொடர்ந்து சென்றிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
அதிகாரி மேலும் கூறுகையில்,“இரு சிறுமிகளும் பாதுகாப்பாகவும் எந்த காயமும் இன்றி இருந்தனர். தற்போது அவர்கள் அவரவர் குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இருவரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்படும்,” என்றார்.
திங்கள் இரவு காணாமல் போனதாகக் கூறப்பட்ட இருவரும் வீட்டிற்கு திரும்பாததை குடும்பத்தினர் கவனித்ததும், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.




















