டெஹ்ரான்:
நோபெல் அமைதிப் பரிசு பெற்ற பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் நர்கீஸ் முகம்மதி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானிய அதிகாரிகள் அவரை கடுமையாகக் கைது செய்ததாக நர்கீஸ் முகம்மதி அறநிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மஷாட் நகரில், தனது ஆதரவாளர்களுடன் இருந்தபோது நர்கீஸ் முகம்மதி தடுத்து வைக்கப்பட்டதாக அந்த அறநிறுவனம் கூறியுள்ளது. ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததற்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குமான பாராட்டாக, 2023ஆம் ஆண்டு அவருக்கு நோபெல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
நர்கீஸ் முகம்மதி வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டமை குறித்து நோபெல் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவர் தற்போது எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் குறித்து உடனடியாக தெளிவுபடுத்துமாறும், அவரது பாதுகாப்பும் நியாயமான நடத்தையும் உறுதி செய்யுமாறும் அந்தக் குழு ஈரானை வலியுறுத்தியுள்ளது. மேலும், அவரை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஈரான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வக் கருத்தையும் வெளியிடவில்லை.
2021ஆம் ஆண்டிலிருந்து நர்கீஸ் முகம்மதி, பெயர் பெற்ற எவின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம், மருத்துவ காரணங்களுக்காக மூன்று வாரங்கள் அவர் சிறையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், மீதமுள்ள தண்டனைகளை நிறைவேற்ற அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில், அவரது அண்மைய கைது நடவடிக்கை, கடந்த வாரம் அவரது அலுவலகத்தில் உயிரிழந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிக்கோர்டியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அவர் பங்கேற்றபோது நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நார்வேயைத் தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழு, அந்த வழக்கறிஞரின் மரணம் தொடர்பில் தனிப்பட்ட மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அவரது மரண சூழ்நிலைகள் பல சந்தேகங்களை எழுப்புவதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் நர்கீஸ் முகம்மதி, ஈரான் முழுவதும் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்களைச் சந்தித்து வந்தார். அவர் கட்டாயத் தலையணிவையும் (ஹிஜாப்) மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
வாழ்நாளில் இதுவரை நர்கீஸ் முகம்மதி 13 முறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மொத்தமாக 36 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 154 கசையடித் தண்டனைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவரது அறநிறுவனம் கூறியுள்ளது.























