கோலாலம்பூர்:
மலேசியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) இணைப்புப் பணிகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடப் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது மின்சாரம் மற்றும் சமிக்ஞை போன்ற அமைப்புகளை (Systems) நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
ஜோகூர் பாருவில் உள்ள தண்டவாளங்களில் ரயில்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் இன்னும் விரிவான சோதனைகள் நடைபெறும்.
2026 டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, 2027 ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் ஒரே இடத்தில் குடியேற்ற மற்றும் சுங்கச் சோதனைகளை முடிக்கும் வகையில், புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மலேசியாவிலேயே சிங்கப்பூர் அதிகாரிகளும், சிங்கப்பூரிலேயே மலேசிய அதிகாரிகளும் சோதனை நடத்த வழிவகை செய்யப்படும் என்றார் அவர்.
புக்கிட் சாகர் (Bukit Chagar) நிலையம் மற்றும் ஜேபி சென்ட்ரல் (JB Sentral) இடையே பயணிகள் எளிதாகச் சென்று வர ஏதுவாக நடைபாதைகள் அமைக்கப்படும்.
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















