ஈப்போ | பிப்ரவரி 27, 2026 :
ஈப்போ, சுல்தான் அஸ்லான் ஷா அணைக்கு அருகிலுள்ள டிஎன்பி (TNB) மின்நிலையத்தில் கேபிள் திருட முயன்ற மூவரில் ஒருவர் அணையில் குதித்து, நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
மின்நிலையத்தில் கேபிள் திருட முயன்றபோது பிடிபடுவோம் என்ற அச்சத்தில், அங்கிருந்த இருவர் தப்பிக்க அணையில் குதித்துள்ளனர்.
நீரில் குதித்தவர்களில் ஒருவர் அணைக்கட்டின் கரையில் சிக்கிக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டார். மற்றொருவர் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார்.
இன்று அதிகாலை 12:40 மணியளவில் கேபிள் திருட்டு குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு அதிகாலை 1:14 மணிக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் தண்ணீருக்கு அடியில் மூழ்குவதும், மற்றொருவர் மேற்பரப்பில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
கரையில் சிக்கியிருந்தவருக்கு உயிர் காக்கும் வளையம் (Buoy) வீசப்பட்டு அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
நீரில் மூழ்கிய நபரைத் தேடும் பணி படகுகள் மூலம் நாள் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இருப்பினும், இதுவரை அவரது உடல் கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபர் ஒருவரைத் தஞ்சோங் ரம்புத்தான் காவல்துறை கைது செய்துள்ளது. கேபிள் திருட முயன்றதால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.
அணைப் பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என்றும், அங்கு அத்துமீறி நுழைவதோ அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதோ உயிருக்கே ஆபத்தாக முடியும் என அபாங் ஜைனல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.





















